2025-26-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நேற்று (மே 04) நடைபெற்றது. இந்த தேர்வுக்காக 5 ஆயிரத்து 453 தேர்வு மையங்கள் இந்தியாவிலும், 13 வெளிநாடுகளில் உள்ள நகரங்களிலும் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு முன்பாக, மருத்துவ மாணவர்களுக்கு போலி கேள்வித் தாளை வழங்கியதாக பிஹாரின் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மாணவர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு சிலர் கேள்வித் தாள் வழங்குவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து எஸ்கே ஃபயாஸ் என்ற நபரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் கிடைத்த தகவலின்படி இதில் தொடர்புடைய மாணவர்களின் பெற்றொரை செல்போனில் அழைத்து போலீசார் எச்சரித்துள்ளதாக தெரிகிறது.
சில தினங்களுக்கு முன்பு பிஹாரில் நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை தொடர்பாக சஞ்சீவ் குமார் சிங் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதே நபர் கடந்த ஆண்டு பிஹார் அரசு பணியாளர் தேர்வு முறைகேட்டிலும் குற்றம்சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கும்பலுக்கும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஃபயாஸுக்கு இடையே தொடர்புள்ளதா என்கிற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.