பாட்னா: பிஹாரில் இரட்டை இன்ஜின் என்டிஏ அரசு வரும் தேர்தலில் அகற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். பிஹாரில் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் இதில் இணைந்து கொண்டார்.
ஆகஸ்ட் 18-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை 28 மாவட்டங்களில் 1,300 கி.மீ. தொலைவை கடந்து நேற்று தலைநகர் பாட்னாவில் நிறைவு பெற்றது. நிறைவு நாளில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசியதாவது: பிஹாரில் இரட்டை இன்ஜின் என்டிஏ அரசு வரும் தேர்தலில் அகற்றப்படும். பிஹார் தேர்தலில் வாக்குத் திருட்டு மூலம் வெற்றிபெற பிரதமர் மோடி முயற்சி செய்கிறார்.
எனவே நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பிஹாரில் தேர்தலுக்கு பிறகு அமையும் அரசானது ஏழைகள், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான அரசாக இருக்கும்” என்றார். ராகுல் காந்தி பேசுகையில், “பிஹாரில் சில மாதங்களுக்கு பிறகு இரட்டை இன்ஜின் என்டிஏ அரசு ஆட்சியில் இருக்காது. மகாத்மா காந்தியை கொன்ற அதே சக்திகள், அம்பேத்கர் மற்றும் காந்திஜியின் அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கின்றன. இந்திய அரசியலமைப்பை அழிக்க நாங்கள் அவர்களை அனுமதிக்க மாட்டோம்” என்றார்.