புதுடெல்லி: பிரபல பாகிஸ்தான் நட்சத்திரங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பிரபல பாகிஸ்தான் நடிகர்கள் மகிரா கான், ஹனியா ஆமிர், சனம் சயீத், அலி ஜாபர் ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒருவர் இந்த நடிகர்களின் பக்கங்களை அணுக முயன்றால், மத்திய அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது.
பாகிஸ்தான் நடிகர்களான பிலால் அப்பாஸ், இக்ரா அஜீஸ், அயேசா கான், இம்ரான் அப்பாஸ், சஜல் அலி ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் நட்சத்திரம் ஃபவாத் கானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடர்ந்து அணுக முடிகிறது. என்றாலும் அவர் நடித்த ‘அபிர் குலால்’ திரைப்படத்தின் வெளியீடு பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இழுபறியில் உள்ளது.
பாடகர்கள் அதிஃப் அஸ்லாம், ஃபர்ஹான் சயீத், அலி சேத்தி, ஷஃப்கத் அமானத் அலி, நடிகர்கள் மவ்ரா ஹோகேன், சபா கமர், அட்னான் சித்திகி, ‘பிக்பாஸ்’ புகழ் ஹம்ஸா அலி அப்பாஸி, வீணா மாலிக் உள்ளிட்டோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை தொடர்ந்து அணுக முடிகிறது.