புதுடெல்லி: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்த 15-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவில் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேசினார். அப்போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உட்பட ஐரோப்பிய தலைவர்கள் உடன் இருந்தனர்.
இந்த சூழலில் பிரான்ஸ் அதிபர் மெக்ரான், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உக்ரைன் போர் மற்றும் காசா போர் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா, ஐரோப்பா, உக்ரைன் தலைவர்களுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற சந்திப்பு குறித்த தகவல்களை அதிபர் மெக்ரான் பகிர்ந்து கொண்டார். மேலும் காசாவின் நிலைமை குறித்தும் அவர் எடுத்துரைத்தார். போர்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும். உக்ரைன், காசாவில் அமைதி திரும்ப வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அதிபர் மெக்ரானிடம் எடுத்துரைத்தேன்.
வர்த்தகம், பாதுகாப்பு, சிவில் அணுசக்தி ஒப்பந்தம், தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியா, பிரான்ஸ் இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது. இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக அதிபர் மெக்ரான் முழு ஆதரவு அளித்தார். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் மெக்ரான் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியா, பிரான்ஸ் இடையே வர்த்தக, பாதுகாப்பு உறவு வலுவடைந்து வருகிறது. ஜி7 கூட்டமைப்புக்கு பிரான்ஸ் தலைமை ஏற்க உள்ளது. இதேபோல பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்க உள்ளது. இதுதொடர்பாக இருவரும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டோம்’’ என்று தெரிவித்தார்.
கடந்த 1974 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் அணு குண்டு சோதனையை இந்தியா நடத்தியது. இந்த காலக்கட்டங்களில் இந்தியா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. ஆனால் பிரான்ஸ் மட்டும் இந்தியாவுடன் நட்புறவை வளர்த்தது. தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதித்துள்ளார். எனினும் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் வழக்கம்போல இந்தியாவுடன் நட்புறவைப் பேணி வருகிறார்.