புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரி குறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை நாட்டு மக்கள் நாளை (செப்.22) முதல் பெறலாம். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு, எச்1பி விசா விவகாரம், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும், இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது அமெரிக்கா என ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி நேரலையில் உரையாற்றுகிறார்.
இதோடு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, வாக்கு திருட்டு விவகாரம் குறித்து மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மீது குற்றச்சாட்டு வைத்துள்ளது. இந்தச் சூழலில்தான் பிரதமர் மோடி இன்று பேசவிருக்கிறார். தனது உரையில் பிரதமர் மோடி என்ன பேசுவார்? நாட்டு மக்களுக்கு என்ன தெரிவிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடைசியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசி இருந்தார். அப்போது இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி புகழ்ந்திருந்தார். கடந்த 2016-ல் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு கொள்கையை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.