பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) தனது வீட்டு பணிப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கடந்த மாதம் அவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: எனது வீட்டு பணிப்பெண் போலீஸாரின் தூண்டுதலின்பேரில் என் மீது பாலியல் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட பெண் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணை 2024 மே 10-ம் தேதி எனது பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று படுக்கையை காட்டினர். அதில் கறை இருந்ததால் குற்றம் உறுதி செய்யப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.
3 ஆண்டுகளாக கறையிருக்க வாய்ப்பில்லை. எனவே கீழமை நீதிமன்றம் வழங்கிய சாகும் வரை சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனு தசரா விடுமுறைக்கு பின்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.