கொல்கத்தா: கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார், குற்றம் நடந்த கல்லூரிக்கு வருகை தந்தார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார் இன்று தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரிக்குச் சென்றார். அங்கு வழக்கின் விசாரணை விவரங்கள் குறித்து பொறுப்பதிகாரியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ச்சனா மஜும்தார், “காவல்துறையினர் பாதிக்கப்பட்டவரை சந்திக்கவோ, குற்றம் நடந்த இடத்தைப் பார்க்கவோ, அந்தப் பகுதிகளில் புகைப்படங்கள் எடுக்கவோ எங்களை அனுமதிக்கவில்லை. அதேபோல பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை நாங்கள் சந்திக்க காவல்துறை விரும்பவில்லை
பாதிக்கப்பட்டவரின் குடும்பம் இருக்கும் இடம் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறுகிறார்கள். வழக்கின் நோடல் அதிகாரியான துணை ஆணையருக்கு பாதிக்கப்பட்டவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர்கள் இப்போது வீட்டில் இல்லை. அவர்கள் எங்கோ மறைத்து வைக்கப்பட்டுள்ளனர்.” என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், “நாங்கள் எங்களின் அறிக்கையில் இவை அனைத்தையும் சேர்ப்போம். நேற்று ஆணையத்திடமிருந்து கடிதம் கிடைத்த பிறகு, காவல்துறை அனைத்து வேலைகளையும் ஒரே நாளில் முடித்தது, இப்போது பாதிக்கப்பட்டவர் மற்றும் குடும்பத்தினர் எங்கே இருக்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இது அபத்தமானது. இந்த விஷயத்தில் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்வோம்.” என்று அவர் கூறினார்.