திருவனந்தபுரம்: பாலியல் துன்புறுத்தல் புகார்களில் சிக்கிய கேரளாவின் பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மாம்கூட்டத்தில் (35), காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கேரளாவின் பாலக்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸை சேர்ந்த ராகுல் மாம்கூட்டத்தில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், அவர் மீது மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். “காங்கிரஸை சேர்ந்த இளம் தலைவர் (ராகுல் மாம்கூட்டத்தில்) பலமுறை சமூக வலைதளங்கள் வாயிலாக பாலியல்ரீதியான தகவல்களை அனுப்பினார். என்னை ஹோட்டலுக்கு அழைத்தார்’’ என்று தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து, எழுத்தாளர் ஹனி பாஸ்கரன், திருநங்கை அவந்திகா மற்றும் காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் உட்பட பலரும் ராகுல் மீது பாலியல்ரீதியான குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதை தொடர்ந்து, கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியில் இருந்து ராகுல் மாம்கூட்டத்தில் சமீபத்தில் விலகினார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் நேற்று நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கேரள காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் கூறும்போது, “ராகுல் மாம்கூட்டத்தில் மீது காவல் நிலையத்தில் யாரும் புகார் அளிக்கவில்லை. எனினும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. எனவே, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் கட்சி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் ராகுல் மாம்கூட்டத்தில் நீக்கப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.