புதுடெல்லி: இஸ்ரேலிய அரசால், பாலஸ்தீனத்தில் அப்பாவிகள் கொல்லப்படுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி வத்ரா கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையை செய்து வருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை அது கொன்றுள்ளது, இவர்களில் 18,430 பேர் குழந்தைகள்.
அதோடு, நூற்றுக்கணக்கானவர்களை இஸ்ரேல் பட்டினியால் கொன்றுள்ளது, இதில் பலர் குழந்தைகள். மேலும், பல லட்சம் பேர் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் மரணத்தை நெருங்கும் அபாயம் உள்ளது.
இந்தக் குற்றங்களை மவுனமாக செயல்படுத்துவது மட்டுமல்லாது, அவற்றை வேடிக்கை பார்ப்பதும்கூட ஒரு குற்றமாகும்.
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது” என கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு எக்ஸ் பதிவில், “அல் ஜசீரா தொலைக்காட்சியின் ஐந்து பத்திரிகையாளர்கள் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது, பாலஸ்தீன மண்ணில் நிகழ்ந்துள்ள மற்றொரு கொடூரமான குற்றமாகும்.
உண்மைக்காக நிற்கத் துணிந்தவர்களின் அளவிட முடியாத தைரியத்தை, இஸ்ரேலிய அரசின் வன்முறை மற்றும் வெறுப்பால் ஒன்றும் செய்ய முடியாது.
ஊடகங்களில் பெரும்பாலானவை அதிகாரத்துக்கும் வர்த்தகத்துக்கும் அடிமைப்படுத்தப்பட்ட உலகில், இத்தகைய துணிச்சலான ஆன்மாக்கள் உண்மையான பத்திரிகை என்றால் என்ன என்பதை நமக்கு நினைவூட்டி உள்ளன. அவர்கள் சாந்தியடையட்டும்” என தெரிவித்துள்ளார்.