பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனிரின் குற்றச்சாட்டுக்கு , இந்தியா கர்னல் சோபியா குரேஷி மூலம் தக்க பதில் அளித்துள்ளது என காங். எம்.பி சசி தரூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சசி தரூர் கூறியதாவது: இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக இணைந்து வாழ்வது சாத்தியமற்றது என பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனிர் கூறினார். அதற்கு ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலம் பாக். ராணுவ தளபதிக்கும், உலகத்துக்கும் இந்தியா சரியான பதில் அளித்துள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி காஷ்மீரி பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்.
அவருடன் இணைந்து பேட்டியளித்த ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர். இது பாக். ராணுவ தளபதியின் கருத்துக்கு சரியான பதிலடி. இது பாகிஸ்தானியர்கள் கூறுவதுபோல் இந்து – முஸ்லிம் பிரச்சினை அல்ல. இந்தியாவில் இந்து-முஸ்லிம் ஒன்றாக இணைந்து வாழ்கிறோம் என்பதை நாம் நிருபித்து வருகிறோம்.
இந்தியா தீவிரவாதத்துக்கு எதிரானது. பாகிஸ்தானியர்களின் தீய சூழ்ச்சிகளுக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிரிவினையும் இல்லை. இது சரியான பதிலடி. இதன் மூலம் நான் பெருமிதம் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.