புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு ஒரு தகவலை அளித்தால் ரூ.50,000 கிடைக்கும் என்று கைதான கடற்படை ஊழியர் விஷால் யாதவ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஹரியானாவின் ரேவரியை சேர்ந்த விஷால் யாதவ், டெல்லியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு கடற்படையின் ரகசிய தகவல்களை வழங்கி வந்துள்ளார். அண்மையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராஜஸ்தான் உளவுத் துறை போலீஸார் கூறியதாவது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் உளவாளிகளாக செயல்பட்ட 2 பேரை அண்மையில் கைது செய்தோம். அவர்கள் இருவரும் சமூக வலைதளத்தில் பிரியா சர்மா என்ற பெண்ணிடம் தொடர்பில் இருந்துள்ளனர்.
அந்த பிரியா சர்மாவின் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்தபோது கடற்படை ஊழியர் விஷால் யாதவ் குறித்த தகவல்கள் கிடைத்தன. வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பாக அவரை கைது செய்தோம். இவ்வாறு ராஜஸ்தான் உளவுத் துறை போலீஸார் தெரிவித்தனர்.
கைதான விஷால் யாதவ், ராஜஸ்தான் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்எஸ்பி தேர்வில் தேர்ச்சி பெற்று கடற்படையில் இணைந்தேன். எனக்கு ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். நாளடைவில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்தேன். அப்போது சமூக வலைதளத்தில் பிரியா சர்மா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அந்த பெண்ணின் புகைப்படம் அழகாக இருந்தது. அவருடன் நட்பை வளர்த்தேன்.
கடற்படை சார்ந்த சில விவரங்களை பிரியா சர்மா கோருவார். அந்த தகவல்களை அவருக்கு வழங்குவேன். ஒரு தகவலுக்கு ரூ.6,000-ஐ அவர் எனது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைப்பார். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது மிக முக்கியமான தகவல்களை கோரினார்.
கடற்படை வட்டாரத்தில் இருந்து அந்த தகவல்களை பெற்று பிரியா சர்மாவுக்கு தெரிவித்தேன். அப்போது ஒரு தகவலுக்கு ரூ.50,000-ஐ அவர் வழங்கினார். சிலமுறை கிரிப்டோகரன்சி மூலம் பணத்தை அனுப்பி வைத்தார். அண்மை காலத்தில் மட்டும் எனக்கு ரூ.2 லட்சம் பணம் கிடைத்தது.
வாட்ஸ் அப், பேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக பிரியா சர்மாவுடன் தொடர்பில் இருந்தேன். ஆரம்பத்தில் பிரியா சர்மா ஐஎஸ்ஐ உளவாளி என்பது தெரியாது. ஆனால் நான் அளிக்கும் ரகசிய தகவல்களுக்கு அவர் பணம் வழங்கியபோது அவர் ஐஎஸ்ஐ உளவாளி என்பதை அறிந்து கொண்டேன்.
பணத்துக்கு ஆசைபட்டு படுகுழியில் விழுந்துவிட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான விஷால் யாதவுக்கு சரண்யா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
பாகிஸ்தான் பெண் உளவாளிகள் குறித்து இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு சார்பில் கல்லூரிகளில் படிக்கும் அழகான பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கராச்சி, லாகூர், ஹைதராபாத்தில் உள்ள ஐஎஸ்ஐ முகாம்களில் அவர்களுக்கு நடை, உடை, மொழி சார்ந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக இந்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகளில் சரளமாக பேசவும் இந்திய பெண்களை போன்று உடையணியவும் இந்து மத சம்பிரதாயங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நன்கு பயிற்சி பெற்ற பெண்கள் சமூக வலைதளங்களில் போலியான பெயர்களில் கணக்குகளை தொடங்குகின்றனர். இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை, டிஆர்டிஓ, எல்லை பாதுகாப்புப் படை, ரயில்வே, இஸ்ரோ, வெளியுறவுத் துறையை சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகளுக்கு அவர்கள் வலை விரிக்கின்றனர்.
முதலில் சமூக வலைதளங்களில் நட்பு அழைப்பை அனுப்புவார்கள். நட்பு அழைப்பை ஏற்ற பிறகு வீடியோ காலில் பேசத் தொடங்குவார்கள். சில நேரங்களில் ஆடையின்றி தோன்றி அதிர்ச்சி அளிப்பார்கள். இறுதியில் அவர்களது வலையில் சிக்கும் இந்தியர்களிடம் இருந்து ரகசிய தகவல்களை பெற்று ஐஎஸ்ஐ அமைப்பிடம் வழங்குகின்றனர்.
ஒரு பெண் உளவாளி சராசரியாக 50 பேரை தனது வலையில் வீழ்த்துகிறார். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஐஎஸ்ஐ பெண் உளவாளிகள் வலையில் சிக்கிய ஏராளமான ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தற்போது கைதாகி உள்ள விஷால் யாதவை பேஸ்புக் வாயிலாக பிரியா சர்மா என்ற பெயரில் ஐஎஸ்ஐ பெண் உளவாளி தனது வலையில் வீழ்த்தி உள்ளார். தற்போது ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண் உளவாளிகள் சமூக வலைதளங்களில் உலா உருகின்றனர். இதுதொடர்பாக எச்சரிக்கையாக இருக்கும்படி அனைத்து அரசு துறைகளையும் அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.