புதுடெல்லி: பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு பாகிஸ்தானில் ஆறு பேர் ஏகே-47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை ஸ்காட்லாந்து யூடியூபர் வெளியிட்டுள்ளார்.
யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு சென்றிருந்த போது லாகூரில் உள்ள அனார்கலி பஜாருக்கு சென்று சுற்றிப்பார்த்துள்ளார். அப்போது அவருக்கு ஏகே-47 துப்பாக்கி ஏந்திய ஆறு பேர் சுற்றிநின்று பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இதனை தான் நேரில் பார்த்ததாக ஸ்காட்லாந்து யூடியூபர் கல்லம் மில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“கல்லம் அப்ராடு” என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கல்லம் மில் கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் சென்றிருந்தார். லாகூரின் அனார்கலி பஜாரில் அவர் எடுத்த வீடியோவில் ” நோ பியர்” என எழுதப்பட்ட ஜாக்கெட் அணிந்தவர்கள் துப்பாக்கியுடன் நின்றிருக்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் ஜோதி மல்ஹோத்ரா காணப்படுகிறார்.
அப்போது கல்லம் தன்னை ஸ்காட்லாந்து யூடியூபர் என ஜோதியிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள பாகிஸ்தானுக்கு இது முதல் பயணமா என்று அவர் கேட்கிறார். இல்லை இது ஐந்தாவது முறை என கல்லம் பதிலளிக்கிறார். இந்தியா வந்திருக்கிறீர்களா நான் ஒரு இந்தியர் என்று ஜோதி தன்னை கல்லமிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பாகிஸ்தானில் வரவேற்பு எப்படி என கல்லம், ஜோதியிடம் கேட்டபோது அவர் ” அருமை” என்று பதில் கூறுகிறார்.
இந்த வீடியோ பாகிஸ்தானில் ஜோதிக்கு கிடைத்த விசேஷ வரவேற்பு குறித்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகளை அவர் சந்தித்ததாகவும், இந்தியாவுக்கு வந்த பிறகும் அவர்களிடம் ஜோதி தொடர்பில் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
யூடியூபர் ஜோதியின் செலவுகள் அவரது வருமானத்துடன் பொருந்தவில்லை எனவும், பாகிஸ்தான் அவருக்கு நிதியுதவி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதவிர, ஜோதி சீனாவுக்கு சென்று அங்கும் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
14 நாள் காவல்: இதனிடையே, உளவாளி யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா ஹரியானாவின் ஹிசார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.