பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவுத் தகவல்களை கொடுத்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டம் ஜீரோ ஆர்டி மோகன்கர் பகுதியைச் சேர்ந்தவர் பதான் கான். இவரை ராஜஸ்தான் புலனாய்வுத்துறை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்து தகவல்களைப் பரிமாறி வந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த சில வாரங்களாக இவரைக் கண்காணித்து வந்த ராஜஸ்தான் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். இவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு இந்திய சிம்கார்டுகளை வழங்கியுள்ளார். மேலும் உளவுப் பார்த்து தகவல்களை சொன்னதற்காக அதிக அளவில் பணத்தையும் பெற்று வந்துள்ளார்.
இதுகுறித்து ராஜஸ்தான் புலனாய்வுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜெய்சால்மர் மாவட்டத்திலுள்ள ஜீரோ ஆர்டி மோகன்கர் பகுதி, பாகிஸ்தானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அங்குதான் பதான் கான் வசித்து வருகிறார். மேலும் கடந்த 2013-ல் பாகிஸ்தானுக்கு பதான் கான் சென்றபோது அங்குள்ள ஐஎஸ்ஐ அமைப்பினருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஐஎஸ்ஐ அதிகாரிகளிடமிருந்து ஏராளமான பணத்தைப் பெற்றுக் கொண்டு சதிவேலை பயிற்சியையும் பெற்றுள்ளார். 2013-க்குப் பிறகு அவர் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று ஐஎஸ்ஐ அதிகாரிகளைச் சந்தித்து வந்துள்ளார். தொடர்ந்து ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்து தகவல்களைப் பரிமாறி வந்துள்ளார்.
ஜெய்சால்மர் சர்வதேச எல்லைப் பகுதி குறித்த முக்கியத் தகவல்களையும் அவர் பரிமாறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.