ரேவா: பழங்கால நாணயங்களுக்கு ரூ. 2 கோடி வரை தருவதாக கூறி சைபர் மோசடியில் சிக்கி ஏமாந்த 65 வயது முதியவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் ரேவா நகரைச் சேர்ந்தவர் சரோஜ் துபே (65). இவர் பள்ளி ஒன்றில் காவலாளியாக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஜூலை 1-ம் தேதி அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. பழங்கால நாணய நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறிக்கொண்டு அலங்கார மற்றும் பாரம்பரிய நோக்கங்களுக்காக அரசு பழங்கால நாணயங்களை வாங்குவதாகவும் அதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதாகவும் ஆசை காட்டியுள்ளார்.
இதனை நம்பி தான் வைத்துள்ள பழங்கால நாணயங்களின் படங்களை சைபர் மோசடி நபருக்கு துபே அனுப்பியுள்ளார். இதற்காக ரூ.66.75 லட்சம் வழங்குவதாகவும் செயலாக்க கட்டணமாக ரூ.520 செலுத்துமாறும் அந்த மோசடி கும்பல் துபேயிடம் கூறியுள்ளது.
இதனை உண்மை என நம்பி துபே பணம் செலுத்தியதும் அந்த மோசடி கும்பல் பரிசு பணம் நிரம்பிய பைகளின் வீடியோ, சான்றிதழ் ஆகியவற்றை துபேயின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளது. இதனால் சந்தோஷம் அடைந்த துபேயிடம் வரி மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த மேலும் பணம் வேண்டும் என மோசடி கும்பல் கூறியதையடுத்து உறவினர், நண்பர் என பலரிடம் கடன் வாங்கி ஆறு பரிவர்த்தனைகள் மூலமாக ரூ.37,000 அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில், மேலும் ரூ.10,000 டெபாசிட் தொகை செலுத்த கோரியபோதுதான் அவரது மனைவி நிர்மலாவுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. அவர் ஏமாற்றப்பட்டதை குடும்பத்தினர் துபேயிடம் தெரிவித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த துபே தனது தந்தை உரிமம் வாங்கி வைத்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் விவேக் சிங் கூறுகையில், “சைபர் மோசடி மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பழங்கால நாணயங்களுக்கு ஈடாக கோடிக்கணக்கில் பணம் தருவதாக கூறி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சைபர் மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் செலுத்திய வங்கி கணக்குகள் மற்றும் ஐபி முகவரிகளைக் கொண்டு தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.