புதுடெல்லி: நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் பயணிகள் ரயில் சேவை அடிப்படை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்: ரயில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயணிகளின் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம் பயணிகள் ரயில் சேவைகளின் அடிப்படை கட்டணத்தை சீராய்வு செய்து திருத்தியுள்ளது. இது 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. கட்டண சீரமைப்பின் முக்கிய அம்சங்கள்:
> புறநகர் ரயில் பயணக் கட்டணங்கள் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணத்தில் (புறநகர் மற்றும் புறநகர் அல்லாத வழித்தடங்களுக்கு) எந்த மாற்றமும் இல்லை.
> சாதாரண ஏசி அல்லாத வகுப்புகளுக்கு (புறநகர் அல்லாத பிற ரயில்கள்): இரண்டாம் வகுப்பு – ஒரு கிலோமீட்டருக்கு அரை பைசா அதிகரிப்பு. (நிபந்தனைக்கு உட்பட்டது)
- 500 கி.மீ வரை கட்டண அதிகரிப்பு இல்லை.
- 501 முதல் 1500 கி.மீ தூரத்துக்கு ரூ.5 அதிகரிப்பு
- 1501 முதல் 2500 கி.மீ தூரத்துக்கு ரூ.10 அதிகரிப்பு
- 2501 முதல் 3000 கி.மீ தூரத்துக்கு ரூ.15 அதிகரிப்பு
- படுக்கை வசதி வகுப்பு: ஒரு கிலோமீட்டருக்கு 0.5 பைசா அதிகரிப்பு
முதல் வகுப்பு: ஒரு கிலோமீட்டருக்கு 0.5 பைசா அதிகரிப்பு
மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு (ஏசி அல்லாதவை):
- இரண்டாம் வகுப்பு: ஒரு கிலோமீட்டருக்கு 01 பைசா அதிகரிப்பு
- படுக்கை வசதி வகுப்பு: ஒரு கிலோமீட்டருக்கு 01 பைசா அதிகரிப்பு
- முதல் வகுப்பு: ஒரு கிலோமீட்டருக்கு 01 பைசா அதிகரிப்பு
ஏசி வகுப்புகளுக்கு (மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்கள்):
> அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் ஒரு கிலோ மீட்டருக்கு 02 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
> ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, வந்தே பாரத், தேஜஸ், ஹம்சஃபர், அமிர்த பாரத், மகாமனா, கதிமான், அந்தியோதயா, ஜன் சதாப்தி, யுவா எக்ஸ்பிரஸ் உட்பட முதன்மை மற்றும் சிறப்பு ரயில் சேவைகளுக்கான கட்டணம், திருத்தப்பட்ட வகுப்பு வாரியான கட்டண கட்டமைப்பின்படி பொருந்தும். துணை கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை.
> முன்பதிவு கட்டணம், அதிவிரைவு ரயில் கூடுதல் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களில் எந்த மாற்றம் இல்லை. விதிகளின்படி ஜிஎஸ்டி தொடர்ந்து வசூலிக்கப்படும்.
> 01.07.2025 அன்று அல்லது அதற்குப் பிறகு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு திருத்தப்பட்ட கட்டணங்கள் பொருந்தும். இந்த தேதிக்கு முன் வழங்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு எந்த மாற்றமும் இன்றி தற்போதைய கட்டணமே பொருந்தும்.
திருத்தப்பட்ட கட்டணக் கட்டமைப்பு சீராக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் ரயில்வே அமைச்சகம் தேவையான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் கட்டண அட்டவணையை புதுப்பிக்க ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.