புதுடெல்லி: “பயங்கரவாதத்துக்கு எதிரான மனித சமூகத்தின் போரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்று உதாரணமாக திகழும். பாதுகாப்புத் துறையில் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் ஒரு சோதனைக் களமாகவும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அமைந்தது” என்று சுதந்திர தினத்தையொட்டிய உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு குறிப்பிட்டார்.
79-வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: “சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு உலக அளவில் ஏராளமான வாக்காளர்களைக் கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ளோம். இந்திய மக்களாகிய அனைவரும் நாம் ஒன்றிணைந்து வலிமையான நாடாக இந்தியாவை உருவாக்கச் செய்வது நம் அனைவரின் கடமையாகும். பிற ஜனநாயக நாடுகளில் வாக்களிக் கும் மக்களைப் போல் அல்லாமல் பாலினம், மதம் மற்றும் பிற காரணிகளின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி சகிப்புத்தன்மையைக் கொண்ட நாடாக உள்ளது.
முந்தைய கால ஜனநாயக நடைமுறைகளைப் பிரதிபலிக்கும் வகையில், இயற்கையாகவே நம் நாட்டின் ஜனநாயக அடிப்படையிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் இந்தியா மிகப் பழமையான குடியரசு நாடாக உள்ளது. ஜனநாயகத்தை தாயாக மதித்து நடப்பதே சரியான வழிமுறையாகும். நமது அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயகத்தின் வலிமையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. நாம் பல்வேறு ஜனநாயக அமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளதன் மூலம் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தியுள்ளோம். இவை அனைத்துக்கும் மேலாக நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் மிகவும் பெருமை அளிக்கக் கூடியதாகும்.
நாம் கடந்த காலங்களை உற்று நோக்கும்போது நாட்டின் பிரிவினை நமக்கு மிகப் பெரிய மனவேதனையை அளித்துள்ளதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இன்று பிரிவினை கொடூரங்களின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாடு பிரிக்கப்பட்ட போது, கடும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதுடன் லட்சக்கணக்கான மக்கள் கட்டாயமாக வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர். இன்று வரலாற்றில் இடம் பெற்றுள்ள இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம்.
இந்தியா தற்போது தற்சார்பு நிலையை நோக்கி பயணிப்பதுடன் அதற்கான இலக்கை எட்டுவதற்கான நம்பிக்கையுடன் முன்னேற்றம் அடைந்து வருகிறது. பொருளாதாரத்துறையைப் பொறுத்தவரை இந்தியா குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்து வருகிறது. கடந்த ஆண்டு நாட்டின் உள்நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருந்ததுடன் உலக அளவில் உள்ள மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா விரைவான வளர்ச்சிக் கண்டு வருகிறது. உலக அளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்ட போது நாட்டின் உள்நாட்டின் தேவைகள், அதிகரித்து வந்தது.
பண வீக்க விகிதம் தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது. நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. பொருளாதாரத்திற்கான அனைத்து முக்கிய குறியீடுகளும் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளன. இது மிகக் கவனமாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் சிறந்த பொருளாதார மேலாண்மை நடவடிக்கைகளால் சாத்தியமாகியுள்ளதுடன், நமது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
சிறந்த நிர்வாக நடைமுறைகள் மூலம் ஏராளமான மக்கள் வறுமை நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஏழ்மை நிலையிலிருந்து விடுபடும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், அவர்கள் அனைவரும் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டு வருகின்றனர். ஆனால் இன்னமும் சிலர் விளிம்பு நிலையில் உள்ளனர். எனவே அவர்கள் மேலும் வறிய நிலைக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த டிஜிட்டல் யுகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அதிவேக வளர்ச்சிக் கண்டு வரும் துறையாக உருவெடுத்துள்ளது. ஏறத்தாழ நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் 4ஜி மொபைல் சேவைகளுக்கான இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ன. எஞ்சியுள்ள சில ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு விரைவில் மொபைல் சேவைகளுக்கான இணைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளது. டிஜிட்டல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வகை செய்கிறது.
இதன் காரணமாக மிகக் குறுகிய காலத்தில் டிஜிட்டல் தொழில் நுட்ப பரிவர்த்தனைகளில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவெடுத்து வருகிறது. மேலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நேரடி பணப்பரிமாற்றத்திற்கு ஆதரவு அளிப்பதுடன் அரசின் நலத்திட்ட உதவிகள் எவ்வித இடையூருமின்றி பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்கிறது. உலக அளவில் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடைபெறுகிறது. இத்தகைய வளர்ச்சி டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளதுடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுதோறும் சீரான வளர்ச்சிபெறுவதற்கும் பங்களிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் அடுத்த நிலைக்கு சென்றுள்ளது. இத்துறையில் நாடு ஏற்கனவே பல நிலைகளை எட்டியுள்ளது. நாட்டின் செயற்கை தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்தும் வகையில் இந்திய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் குறிப்பிட்ட தேவைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான மாதிரிகள் அத்துறையின் முன்னேற்றத்துக்கு உதவுகிறது.
2047-ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகின் மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில் சாமானிய மக்களும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான பயன்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதற்கு இது உதாரணமாக அமைந்துள்ளது.
சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு, எளிதாக வர்த்தகம் செய்வதிலும், எளிதான வாழ்க்கையை மேம்படுத்துவதிலும், சமமான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். வளர்ச்சி என்பது விளிம்புநிலை மக்களுக்கு உதவும் போதும் அவர்களுக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்போது மட்டுமே சாத்தியமாகும். மேலும் அனைத்து துறைகளிலும் முடிந்தவரை நாம் தற்சார்பை அதிகரித்து வருகிறோம். இது நமது தன்னம்பிக்கையை அதிகரித்து வளர்ச்சியடைந்த பாரதம் என்பதையொட்டிய நமது பயணத்தை அதிகரிக்கிறது.
இளையோர்களின் மனதால் உந்தப்பட்டு, நமது விண்வெளித் திட்டம் இதுவரையில்லாத விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஷுபான்ஷு சுக்லா மேற்கொண்ட விண்வெளிப் பயணம், ஒரு தலைமுறையினரை பெரிய கனவுகளை காண தூண்டியுள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது இந்தியாவின் வரவிருக்கும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யானுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நமது இளைஞர்கள் புதிய நம்பிக்கையுடன் விளையாட்டுகளில் முத்திரை பதிக்கின்றனர். உதாரணமாக, சதுரங்க விளையாட்டில் தற்போது இந்திய இளைஞர்களால் முன்பு இல்லாத அளவுக்கு ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-ல் உள்ள தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்தியாவை உலகளாவிய விளையாட்டு கேந்திரமாக திகழச்செய்யும் வகையிலான மாற்றங்களை நாம் அறிவித்துள்ளோம்.
நமது மகள்கள் நமது பெருமை. அவர்கள் ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைகள் உட்பட அனைத்து துறையிலும் தடைகளைக் கடந்து சாதிக்கிறார்கள். விளையாட்டு என்பது திறன், அதிகாரமளித்தல் மற்றும் வலிமையின் முக்கிய குறியீடுகளில் ஒன்றாகும். இந்தியாவைச் சேர்ந்த பத்தொன்பது வயது பெண்ணும், முப்பத்தெட்டு வயதுடைய பெண்ணும் சதுரங்க சாம்பியன்ஷிப்பிற்கான ஃபிடே மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர். இது நமது பெண்களிடையே தலைமுறையாக மற்றும் உலகளவில் ஒப்பிடக்கூடிய திறனை சுட்டிட்டுக் காட்டுகிறது.
இந்த ஆண்டு நாம் பயங்கரவாதத்தின் கொடுமையை எதிர்கொண்டோம். காஷ்மீரில் விடுமுறை நாளில் அப்பாவி மக்களை கொன்றது கோழைத்தனமானது. முற்றிலும் மனிதநேயமற்றது. இந்தியா அதற்கு உறுதியுடன் தக்க பதிலடி கொடுத்தது. நம் நாட்டை காப்பதற்கு எந்த சூழலிலும் நமது பாதுகாப்பு படையினர் தயாராக உள்ளனர் என்பதை ஆபரேஷன் சிந்தூர் எடுத்துக்காட்டியது. உத்தி சார்ந்த தெளிவுடனும், தொழில்நுட்ப திறனுடனும், அவர்கள் எல்லையில் பயங்கரவாத முகாம்களை அழித்தனர். பயங்கரவாதத்துக்கு எதிரான மனித சமூகத்தின் போரில் ஆபரேஷன் சிந்தூர் வரலாற்று உதாரணமாக திகழும் என்று நான் நம்புகிறேன்.
நமது ஒற்றுமை நமது பதிலடியில், மிகவும் கவனிக்கத்தக்கதாகும். இது நம்மைப் பிரிக்க விரும்பியவர்களுக்கு உரிய பதிலடியாகும். இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல கட்சி பிரதிநிதிகளில் நமது ஒற்றுமை வெளிப்பட்டது. நாம் ஆக்கிரமிப்பாளராக இருக்க மாட்டோம் என்றும், ஆனால் நம் மக்களைப் பாதுகாக்க பதிலடி கொடுக்க நாம் தயங்க மாட்டோம் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் கண்டுள்ளன.
பாதுகாப்புத் துறையில் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் ஒரு சோதனைக் களமாகவும் ஆபரேஷன் சிந்தூர் அமைந்தது. நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை அதன் விளைவு நிரூபித்துள்ளது. நமது உள்நாட்டு உற்பத்தி நமது பல்வேறு பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்வதில் நம்மை தன்னிறைவு அடையச் செய்யும் முக்கியமான நிலையை எட்டியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் இது மகத்துவமிக்க சாதனையாகும்” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசினார்.