புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.
தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், பிஹாரில் நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்கத்து நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு வரும் செப்டம்பர் 30-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் இதுபோன்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.