புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்தனர். அப்போது வீட்டின் ஓர் அறையில் பாதி எரிந்த நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பின்னர், தலைமை நீதிபதி நியமித்த குழு தீவிர விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் பதவி விலகுமாறு நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் தலைமை நீதிபதி அறி வுறுத்தினார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து வர்மாவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தலைமை நீதிபதி கடிதம் அனுப்பினார்.
இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இதில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவையில் பதவி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்ய குறைந்தது 100 எம்.பி.க்களின் கையொப்பம் தேவை. அந்த வகையில் கையொப்பம் பெறும் பணி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு விசாரணைக் குழு அமைக்கப்படும்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.