புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 5,862 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு முகக்கவசம் அணிவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க போதிய நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,862 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கேரளாவில் 2 பேர், கர்நாடகா, பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்கள் நால்வரும் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை புதிதாக 8 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது அதிகரித்தாலும் கரோனா பாதித்து காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.
கடந்த சில நாட்களாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நாட்டில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு முகக்கவசம் அணிவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.