புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் தெலங்கானாவை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மகாராஷ்டிர ஆளுநராக இருந்த அவர் அந்த பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பெயரால் ராதாகிருஷ்ணன் ஆங்கிலத்தில் பதவியேற்றுக் கொண்டார். வரும் 2030-ம் ஆண்டு செப்டம்பர் வரை அவர் பதவியில் நீடிப்பார்.
விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு துணைத் தலைவர்கள் ஹமீது அன்சாரி, வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஜெகதீப் தன்கர் பங்கேற்பு: பதவி விலகிய ஜெகதீப் தன்கரும் விழாவில் பங்கேற்றார். கடந்த ஜூலை 21-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அவர், அதன் பிறகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்று, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தின் திருப்பூரில் கடந்த1957-ம் ஆண்டு மே 4-ம் தேதி சி.பி.ராதாகிருஷ்ணன் பிறந்தார். 16-வது வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். 1974-ம் ஆண்டில் பாரதிய ஜன சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு தமிழக பாஜக செயலாளராக பதவி வகித்தார். கடந்த 1998, 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் கோவை தொகுதியில் இருந்து 2 முறைஎம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டில் ஐ.நா. சபைக்கான இந்திய குழுவில் இடம்பெற்றார்.
கடந்த 2004 முதல் 2007 வரை தமிழக பாஜக தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார். அப்போது சுமார் 19,000 கி.மீ தூரத்துக்கு ரத யாத்திரை நடத்தினார். நதிகள் இணைப்பு, தீவிரவாத ஒழிப்பு, பொது சிவில் சட்டம், போதை ஒழிப்பு ஆகியவற்றுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். கடந்த 2016-ல் கொச்சியில் செயல்படும் தென்னை நார் வாரியதலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2023-ல் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அப்போது தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார். 2024-ல் மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது குடியரசு துணைத் தலைவராக அவர் பதவியேற்று உள்ளார்.
புதிய குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு சுமதி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தமிழகத்தில் இருந்து 3 பேர்புதிதாக பதவியேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனையும் சேர்த்து இதுவரை 15 பேர் குடியரசு துணைத்தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இந்த பதவியை அலங்கரித்துள்ளனர். கடந்த 1952 முதல் 1962 வரை சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், கடந்த 1984 முதல் 1987 வரை வெங்கட்ராமன் குடியரசு துணைத்தலைவராக பதவி வகித்த நிலையில், தற்போது தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் இப்பதவிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.