புதுடெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக உணவகம் செயல்பட்டு வருகிறது. அதில் ராகி சிறுதானிய இட்லி, சோள உப்புமா, பாசிப்பருப்பு தோசை மற்றும் காய்கறிகளுடன் கூடிய வறுத்த மீன் உள்ளிட்ட ஊட்டச்சத்தான உணவு வகைகளை விநியோகிக்க நாடாளுமன்ற உணவகம் திட்டமிட்டுள்ளது.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் வேண்டுகோளின்படி, சுவையை தியாகம் செய்யாமல் உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் புதிய உணவு வகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. சுவையான கறிகள் மற்றும் விரிவான ‘தாலி’களுடன் சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுகள், நார்ச்சத்து நிறைந்த சாலடுகள் மற்றும் புரதம் நிறைந்த சூப்களும் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு உணவும் குறைவான கார்போஹைட்ரேட், சோடியம் மற்றும் கலோரிகளைக் கொண்டதாகவும் அத்தியாவசிய ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும் வகையில் கவனமாக திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கோரிக் கையை ஏற்று கடந்த 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்தது. இதையடுத்து சிறுதானியங்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.