புதுடெல்லி: வரும் செப். 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியபோது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினேன் அந்த வேட்கை காரணமாகவே தற்போது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறேன். எனவே இந்த பயணம் எனக்கு புதிது கிடையாது.
பொருளாதார பற்றாக்குறை குறித்து பல்வேறு தரப்பினரும் விவாதிக்கின்றனர். தற்போது இந்திய ஜனநாயகத்தில் இதுபோன்ற பிரச்சினை எழுந்திருக்கிறது. நமது நாட்டின் ஜனநாயகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருகிறது. இதேபோல அரசியலமைப்பு சட்டம், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
இண்டியா கூட்டணி சார்பில் நான் போட்டியிடுகிறேன். உண்மையை சொல்வதென்றால் இந்த தேர்தல் எங்கள் இருவருக்கும் இடையிலான போட்டி கிடையாது. இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி ஆகும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.