புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் 71-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான `தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது.
ஒவ்வொர் ஆண்டும் மத்திய அரசால் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்,ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறுபிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கான் (ஜவான்), விக்ராந்த் மாஸே (12த் ஃபெயில்) ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல, சிறந்த நடிகை ராணி முகர்ஜி (மிசஸ் சட்டர்ஜி வெர்சஸ் நார்வே), துணை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்), துணை நடிகை ஊர்வசி (உள்ளொழுக்கு), இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (வாத்தி), திரைக்கதை ஆசிரியர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்) உள்பட பல்வேறு பிரிவுகளில் பலருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. சிறந்த தமிழ்ப் படமாக ‘பார்க்கிங்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்திய திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக வழங்கப்படும் `தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று நடைபெற்றது. இதில், தேசிய விருதுஅறிவிக்கப்பட்ட திரைக் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அதன்படி, சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான், விக்ராந்த் மாஸே இருவரும் பெற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், ஷாருக்கான் முதல்முறையாக தேசிய விருது பெறுவது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகை விருதை ராணி முகர்ஜி பெற்றார். சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கர், திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை, ‘பார்க்கிங்’ தயாரிப்பாளர் கே.எஸ்.சினிஷ் ‘வாத்தி’ படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் பெற்றனர். இதேபோல, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைக் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து,`தாதா சாகேப் பால்கே’ விருது மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. விருது பெற்றபின் பேசிய அவர், “இந்த தருணம் எனக்கு மட்டுமே சொந்தமானதல்ல.மலையாள திரைப்படக் குடும்பத்துக்கே சொந்தமானது.
இந்த விருதை, எங்கள் துறையின் பாரம்பரியம், படைப்பாற்றலுக்கான கூட்டு மரியாதையாகப் பார்க்கிறேன். மலையாள சினிமாவை கலைநோக்கோடும், கற்பனையோடும் உருவாக்கியவர்களின் சார்பாக இவ்விருதை ஏற்கிறேன். என் கனவுகளிலும் கூட இந்த தருணத்தைக் கற்பனை செய்ததில்லை. அதனால் இது ஒரு கனவு நனவானதல்ல. அதைவிட மிகப் பெரியது. மலையாளத் திரைத் துறைக்கும், கேரள பார்வையாளர்களுக்கும் இவ்விருதை நான் அர்ப் பணிக்கிறேன். சினிமா என் ஆன்மாவின் இதயத் துடிப்பு. மத்திய அரசுக்கு நன்றி” என்றார். விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.