புதுடெல்லி: டெல்லி – என்சிஆர் பகுதிகளில் தெரு நாய்களால் பலர் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள் தெருநாய் கடியில் உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, ‘‘டெல்லி – என்சிஆர் பகுதிகளில் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் பராமரிக்க வேண்டும். அவற்றை மீண்டும் தெருக்களில் விடக்கூடாது’’ என்று கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி உத்தரவிட்டது.
இதற்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து நீதிபதி விக்ரம் நாத் தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கை மாற்றி தலைமை நீதிபதி கவாய் உத்தரவிட்டார்.
இந்த வழக்கை விசாரித்து கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி நீதிபதி விக்ரம் நாத் வெளியிட்ட தீர்ப்பில், ‘‘டெல்லி – என்சிஆர் பகுதிகளில் பிடிக்கப்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போட்டு பிடித்து இடங்களிலேயே விட வேண்டும். தெரு நாய்களுக்கு பொதுமக்கள் பொது இடங்களில் கண்டிப்பாக உணவளிக்க கூடாது. தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு ‘நாய்களுக்கு உணவளிக்கும் இடம்’ என்ற அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை ஏராளமானோர் வரவேற்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் நேற்று முன்தினம் பங்கேற்று பேசியதாவது:
தெரு நாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்தன் மூலம், இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நான் பிரபலமாகி இருக்கிறேன். எதிர்பாராத விதமாக நான் பிரபலமாகி இருக்கிறேன். பலரும் எனக்கு பாராட்டு தெரிவித்தனர். நீதித் துறையில் நான் பணியாற்றி வருவது இந்த துறையில் இருப்பவர்களுக்கு தெரியும். ஆனால், இன்று பரவலாக அறியப்பட்டிருக்கிறேன். இதற்காக தெரு நாய்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வழக்கை எனது அமர்வுக்கு ஒதுக்கிய தலைமை நீதிபதி கவாய்க்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநாடுகளில் இருந்து எனக்கு பாராட்டு தெரிவித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நீதிபதி விக்ரம்நாத் நகைச்சுவையாக பேசினார்.
வரும் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக விக்ரம் நாத் பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.