அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு கலந்தாய்வு கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: மத்திய அரசு தென்னிந்தியாவில் உள்ள ஹைதராபாத், அமராவதி, சென்னை, பெங்களூரு ஆகிய 4 தலைநகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டத்துக்கு சர்வே செய்ய உத்தரவு வழங்கி உள்ளது.
இதன் மூலம் 5 கோடி மக்கள் பயனடைவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முதற்கட்ட ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். இதன்படி இந்த புல்லட் ரயில் திட்டம் அமல் படுத்தப்பட்டால், சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு வெறும் 2 மணி நேரத்தில் சென்றடையலாம்.
அதேபோல், ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கும் வெறும் 2 மணி நேரத்தில் சென்றடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இதனை 7,000 கி.மீ தூரத்துக்கு விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புல்லட் ரயில் திட்டங்கள் டெல்லி – வாராணசி, மும்பை – ஹைதராபாத், சென்னை – மைசூரு உள்ளிட்ட வழித்தடங்களிலும் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.