இந்நிலையில், பரிதாபாத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் ஒரு பகுதி, இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீஸார், காவல் துறை புலனாய்வு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த வெடிபொருட்களை ஆய்வு செய்யும் பணியில் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு தடயவியல், ரசாயன ஆய்வில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் காவல் நிலைய கட்டிடம் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் காவல் துறையினர் விரைந்துசென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த நிலையில், 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5 பேரின் நிலைகவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

