புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லியில் நேற்று மீண்டும் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு தரப்பினருடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங், மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோர் பிரதமரை சந்தித்துப் பேசினர்.
இதன் தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது. கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதற்கிடையே, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் போர் ஒத்திகை நடத்துகிறது. இதுகுறித்து விமானப்படை வட்டாரங்கள் கூறியதாவது: புதன்கிழமை இரவு 9 மணிக்கு பாகிஸ்தானை ஒட்டிய ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் போர் ஒத்திகையை தொடங்கும். இந்த போர் ஒத்திகை வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி வரை நீடிக்கும். இதில் ரஃபேல், மிராஜ் 2000, சுகோய் ரக போர் விமானங்கள் பங்கேற்கும். இந்த நேரத்தில் பயணிகள் விமானம் ராஜஸ்தான் எல்லையில் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறின.
இந்திய விமானப்படையின் பலம்: சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: பாகிஸ்தான் விமானப் படையிடம் அமெரிக்க தயாரிப்பான எப்16 மற்றும் சீன தயாரிப்பான எப்17 ரக போர் விமானங்கள் உள்ளன. இந்திய விமானப் படையிடம் ரஃபேல், சுகோய், மிக், மிராஜ் 2000, ஜாகுவார் உள்ளிட்ட போர் விமானங்கள் உள்ளன.2019 புல்வாமா தாக்குதலின்போது இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள், பாகிஸ்தான் எல்லைக்குள் எளிதாக நுழைந்து தாக்குதல் நடத்தின. பாகிஸ்தான் விமானப் படையால் மிராஜ் 2000 போர் விமானங்களை கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
பாகிஸ்தானின் எப்16 ரக போர் விமானங்கள் மிகவும் பழமையானவை. இந்த போர் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை அமெரிக்கா வழங்கவில்லை. இதனால் எப்16 போர் விமானங்களால் இந்திய விமானப் படையை நிச்சயமாக சமாளிக்க முடியாது. இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்திய எல்லையில் இருந்து கொண்டே பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் சுமார் 120 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்க முடியும்.பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கியின் டிசிஜி புயூகடா என்ற போர்க்கப்பல் கராச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. துருக்கி போர்க்கப்பல் இந்தியாவுடன் நேரடியாக போரில் ஈடுபட்டால்கூட வெற்றி பெற முடியாது. இந்தியாவின் விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் தற்போது அரபிக் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த போர்க்கப்பல், துருக்கி போர்க்கப்பலை துவம்சம் செய்துவிடும். தரை, கடல், வான் பரப்பில் இந்தியாவின் முப்படைகளும் மிகவும் வலுவாக உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சர்வதேச நாடுகள் ஆதரவு: பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு இருப்பதை சர்வதேச நாடுகளிடம் மத்திய அரசு தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துரைத்து உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் கமாண்டோ ஹசீம் மூசா, தீவிரவாத தாக்குதலை தலைமையேற்று நடத்தியிருப்பது புகைப்பட ஆதாரங்களுடன் சர்வதேச நாடுகளிடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன்காரணமாக பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத கட்டமைப்புகளை அழிக்க இந்தியாவுக்கு பெரும்பாலான நாடுகள் முழு ஆதரவு அளித்துள்ளன.அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு பகிரங்கமாக ஆதரவு அளித்துள்ளனர். முஸ்லிம் நாடான கத்தாரும் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளித்திருக்கிறது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியும் பிரதமர் மோடியும் தொலைபேசியில் நேற்று பேசினர். அப்போது தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு கத்தார் மன்னர் முழு ஆதரவு அளித்தார். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.இவ்வாறு ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
கடல் கண்ணிவெடி சோதனை வெற்றி: இரண்டாம் உலகப்போரில், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மன் கடற்படைகள் கடல் கண்ணி வெடிகளை அதிகம் பயன்படுத்தின. கடலில் மூழ்கி இருக்கும் கண்ணி வெடிகளில் பல சென் சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். கப்பலின் ஒலி, அழுத்தம், அடிப்பகுதியின் காந்த சக்தி ஆகியவற்றை இந்த சென்சார்கள் ஈர்க்கும். இந்த கண்ணி வெடிகள் கப்பலின் அடிப் பகுதி, நீர்மூழ்கி கப்பல்களை தகர்க்கும்.
கடற்படை பயன்பாட்டுக்காக எம்ஐஜிஎம் என்ற கடல் கண்ணி வெடியை டிஆர்டிஓ, விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மையம், பாரத் டைனமிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கின. இந்த கடல் கண்ணி வெடி ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பல் மூலம் கடலில் மிதக்கவிடப்பட்டது. அதன்பின் கடலில் மிதந்து வந்த இலக்கை கண்ணிவெடி வெற்றிகரமாக தகர்த்தது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான கண்ணி வெடி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக டிஆர்டிஓ மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.