பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 45 வயதுக்குட்பட்ட 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தனர். இதேபோல கதக் மாவட்டத்திலும் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக கர்நாடக அரசு 10 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. மருத்துவ நிபுணர் குழு சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
அதனை பெற்றுக்கொண்ட பின்னர், தினேஷ் குண்டு ராவ் கூறியதாவது: கரோனா தொற்று பரவலுக்கு பிறகு மாரடைப்புகள் சற்று உயர்ந்துள்ளதை அறிக்கை உறுதி செய்துள்ளது. அதேவேளையில் கரோனா தடுப்பூசியால் இந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு ஆளான நபர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்த நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. திடீர் மாரடைப்புக்கு இதுவும் ஒரு காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இளம்வயது மாரடைப்பு மரணங்களை தடுக்க மருத்துவமனை தவிர பிற இடங்களில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தால் கட்டாயம் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது தான் உயிரிழப்புக்கு சரியான காரணம் என்ன என்பது தெரியவரும். அதனால் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.