பில்வாரா: ராஜஸ்தானில் கூகுள் மேப் உதவியுடன் சென்ற கார், சேதமடைந்த ஒரு பாலத்தை கடக்க முயன்றதில் 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டம் கனகேடா கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் 9 பேர் அண்டை மாவட்டமான பில்வாராவில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றனர். இவர்கள் வழிபாட்டை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் அதிகாலையில் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். ஆனால் கனமழை காரணமாக போலீஸார் சாலை தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் மாற்றுப் பாதையில் சென்றனர்.
இந்நிலையில் சித்தோர்கர் மாவட்டத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் பனாஸ் ஆற்றின் மீது மூடப்பட்டிருந்த ஒரு பாலத்தை இவர்கள் கடக்க முயன்றனர். ஆனால் நடுவழியில் ஒரு பள்ளத்தில் சிக்கிய கார் பிறகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடோடி வந்த வந்த கிராம மக்கள் படகு மூலம் 5 பேரைமீட்டனர். பிறகு தாய்-மகள், மற்றொரு பெண் என 3 பேர் சடல மாக மீட்கப்பட்டனர். 8 வயது சிறுமியை காணவில்லை. அவரை மாவட்ட நிர்வாகத்தினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.