புதுடெல்லி: தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உரியது என்றும், அவரது பக்தராக தான் இதை தெரிவிப்பதாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மேலும், “சீனாவின் அறிக்கைக்கு எதிர்வினையாற்ற நான் விரும்பவில்லை” என்றார்.
இது தொடர்பாக இன்று (ஜூலை 4) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நான் தலாய் லாமாவின் பக்தர். தலாய் லாமாவைப் பின்பற்றுபவர்கள் உலகில் எங்கு இருந்தாலும், அவர்களின் விருப்பம் ஒன்றுதான். தனது வாரிசை தலாய் லாமாவே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அது. தலாய் லாமா விவகாரத்தில் எவ்வித குழப்பத்துக்கும் இடமில்லை.
பவுத்த மதத்தைப் பின்பற்றுபவர்களும், தலாய் லாமாவை பின்பற்றுபவர்களும் தலாய் லாமா தனது வாரிசை, தானே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது குறித்து இந்திய அரசு பேச வேண்டிய அவசியமில்லை. சீனாவின் அறிக்கைக்கு எதிர்வினையாற்ற நான் விரும்பவில்லை. சீன அரசின் சார்பாகவோ அல்லது இந்திய அரசின் சார்பாகவோ நான் எதுவும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன? – திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்து, இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். அவர் தனது 90-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிவிப்பில், “எனது மறைவுக்கு பிறகும் தலாய் லாமா மரபு தொடரும். அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது” என்று கூறியிருந்தார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம்” என தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, கிரண் ரிஜிஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “அடுத்த தலாய்லாமா யார் என்பதை அதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பு மற்றும் தலாய் லாமாவின் விருப்பத்தின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றே தலாய் லாமாவை பின்பற்றும் அனைவரும் நினைக்கிறார்கள். தலாய் லாமாவையும் நடைமுறை மரபுகளையும் தவிர வேறு யாருக்கும் அதை தீர்மானிக்கும் உரிமை இல்லை” என்று கூறியிருந்தார்.
மத்திய அமைச்சரான கிரண் ரிஜிஜு-வின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகம், “உள்நாட்டு விவகாரங்களில் தலையிட திபெத் பிரச்சினையைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்தும் என்று சீனா நம்புகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதை இந்தியா தவிர்க்கும் என்றும் நம்புகிறது” என்று தெரிவித்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் கிரண் ரிஜிஜு தனது கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.