புதுடெல்லி: தர்மஸ்தலா கோயிலில் பெண்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டது தொடர்பாக வெளியாகும் தகவல்களில், கோயில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்கடேவின் சகோதரர் ஹர்ஷேந்திர குமாருக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதை தடைசெய்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று ( ஜூலை 23) மறுத்துவிட்டது.
‘தேர்ட் ஐ’ என்ற யூடியூப் சேனலுக்காக ஆஜரான வழக்கறிஞர் வேலன், இந்த மனுவை முன்கூட்டியே பட்டியலிட வாய்மொழியாகக் கோரிக்கை வைத்தார். அப்போது இந்த விவகாரத்தில் முதலில் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அறிவுறுத்தினார்.
‘தேர்ட் ஐ’ என்ற யூடியூப் சேனல் தாக்கல் செய்த அந்த மனுவில், ‘இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட்ட சிவில் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். பெங்களூரு சிவில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, தர்மஸ்தலா கோயிலில் நடந்த கடுமையான குற்றங்கள் தொடர்பான விசாரணையை நேரடியாகத் தடுக்கிறது. இது பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் மீதான நேரடித் தாக்குதலாகும்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? – கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த கோயிலில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தர்மஸ்தலா கோயிலில் துப்புரவு பணியாற்றிய 52 வயதான ஒருவர், போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து தர்மஸ்தலா போலீஸார் கோயில் நிர்வாகத்தின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து 65 வயதான பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘‘கடந்த 2003ம் ஆண்டு தர்மஸ்தலா கோயிலுக்கு சென்ற எனது 22 வயது மகள் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்த போது, என்னை தாக்கி சித்ரவதை செய்தனர். என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து தர்மஸ்தலா பாலியல் கொலைகள் வழக்கு விவகாரத்தில் டிஜிபி பிரனாப் மொஹந்தி தலைமையிலான சிஐடி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில், தர்மஸ்தலாவில் பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், கோயிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி செய்தி வெளியிட பெங்களூரு சிவில் நீதிமன்றம் தடை விதித்தது. அதற்கு முன்னதாக வீரேந்திர ஹெக்டே பற்றி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட 8,000-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அழிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.