புதுடெல்லி: உத்தராகண்ட்டின் டேராடூனில் இன்று காலை ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் 200 மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர். உத்தராகண்ட்டின் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்டு விசாரித்து அறிந்தனர்.
உத்தராகண்ட்டின் டேராடூனில் இன்று காலை மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. டேராடூனின் பவுண்டா எனும் பகுதியில் உள்ள தேவபூமி கல்வி நிறுவனத்தில் பயிலும் 200 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர், மாணவர்களை பத்திரமாக மீட்டனர். தொடர் கனமழை காரணமாக இப்பகுதியில் பல்வேறு சாலைகள், வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் கடும் சேதமடைந்தன.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் தொலைபேசியில் பேசினார். மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்த பிரதமர், சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்டு பேசியதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “கனமழை காரணமாக வீடுகள், அரசு கட்டிடங்கள் என ஏராளமான சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இன்று காலை என்னிடம் தொலைபேசியில் பேசி விவரங்களை கேட்டறிந்தனர். இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசு உத்தராகண்ட்டுக்கு உறுதியாக துணை நிற்கிறது என்பதை வலியுறுத்தினர். அனைத்து உதவிகளும வழங்கப்படும் என உறுதி அளித்தனர்” என தெரிவித்துள்ளார்.
டேராடூனில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் பார்வையிட்டார். சஹஸ்த்ரதாரா, ராய்ப்பூர் உள்ளிட்ட டேராடூனில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஆய்வு செய்தார். இன்று காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ரிஷிகேஷ் மாவட்டத்தில் உள்ள சந்திரபாகா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மூன்று பேரை மாநில பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.