புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடைபெற்று, கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ‘கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்’ என்றும் இண்டியா கூட்டணி குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்து தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சி எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனாவின் (உத்தவ்) சஞ்சய் ராவத், திரிணமூல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா உட்பட 25 கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பேரணியில் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற வளாகத்திலேயே அனைவரையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. ராகுல், கார்கே, பிரியங்கா, அகிலேஷ் உள்ளிட்ட எம்.பி.க்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். வாகனங்களில் ஏற்றி, அருகே உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனைவரும் 2 மணி நேரத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.
ராகுல் கூறியபோது, ‘‘தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க பேரணியாக சென்ற எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றும் எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார்.