புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியான துவாரகாவை சேர்ந்த கரண் தேவ் என்பவரை அவரது மனைவி சுஷ்மிதா, அவரின் காதலர் ராகுல் இணைந்து கொலை செய்துள்ளனர். இந்த விவகாரம் அவர்கள் இருவருக்கும் இடையிலான டெக்ஸ்ட் சாட் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 13-ம் தேதி அன்று கரண் தேவ் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் கரண் தேவ் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும், கொலையை கரண் தேவின் மனைவி சுஷ்மிதா மற்றும் கரணுக்கு சகோதரர் உறவு முறையான ராகுல் தேவும் இணைந்து அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது.
உயிரிழந்த கரணின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தனது குடும்பத்தினரிடம் மின்சாரம் பாய்ந்ததில் கணவர் கரண் உயிரிழந்தார் என சுஷ்மிதா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கரணின் இளைய சகோதரரான குணால் தேவ், சுஷ்மிதா மற்றும் ராகுல் தேவ் இடையிலான இன்ஸ்டா சாட்டை எடுத்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், போலீஸாரிடம் அதை ஜூலை 16-ம் தேதி கொடுத்துள்ளார்.
உயிரிழந்த கரணுக்கு ஜூலை 12-ம் தேதி அன்று இரவு உணவில் சுமார் 12 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார் சுஷ்மிதா. இந்த விவரம் அந்த சாட் மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மாத்திரை வேலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என ராகுலிடம் சாட் மூலம் சுஷ்மிதா கேட்டுள்ளார்.
‘மின்சாரத்தை பாய்ச்சி உயிரிழக்க செய்யலாம்’ என்ற யோசனையை ராகுல் கூறியுள்ளார். ‘என்னால் எப்படி செய்ய முடியும்?’ என சுஷ்மிதா கேட்க, ‘கைகளை டேப் கொண்டு கட்டிய பின்னர் செய்யலாம்’ என ராகுல் கூறியுள்ளார்.
‘உன்னிடம் உள்ள அனைத்து மாத்திரையையும் கொடு’ என ராகுல் சொல்ல, ‘என்னால் அதை தனியாக முடியாது. நீயும் வந்தால் இணைந்து செய்யலாம்’ என சுஷ்மிதா பதில் கொடுத்துள்ளார். இந்த சாட் உரையாடல் தான் போலீஸ் வசம் பகிரப்பட்டுள்ளது.
இதை அடிப்படையாக கொண்டு சுஷ்மிதா மற்றும் ராகுலை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சுஷ்மிதா மற்றும் ராகுல் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.