புதுடெல்லி: டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் அருகில் உள்ள மளிகை கடைகளில் மக்கள் தங்களுக்கு தேவையான பொதுவான மருந்துகளை வாங்கிக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.
இருமல் சிரப், வலி நிவாரணி மாத்திரைகள், பூஞ்சை எதிர்ப்பு கிரீம் போன்ற மருந்து சீட்டு தேவைப்படாத மருந்துகளை பெற மக்கள் இனி மருந்து கடைகளை தேடி அலைய வேண்டியதில்லை.
ஏனெனில் இந்த மருந்துகள் அனைத்தும் விரைவில் அருகிலுள்ள உங்களது மளிகைக் கடைகளில் விற்பனைக்கு வர உள்ளது. இதற்காக, இனி மருத்துவரின் கையொப்பம் இட்ட மருந்து சீட்டுகளுக்காக மக்கள் மருத்துவமனைகளுக்குச் சென்று வரிசையில் காத்திருக்க தேவையில்லை.
மருந்து சீட்டு தேவைப்படாத மருந்துகள் மக்களுக்கு எளிதாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
சில்லறை மளிகை கடை விற்பனையாளர்கள் இந்த பொதுவான மருந்துகளை விற்பனை செய்வதற்காக தனியாக மருந்தாளுநரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அவர்கள் அதற்கான உரிமங்களை பெற வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.