குண்டூர்: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு குண்டூர் மாவட்டம், தெனாலியில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கருப்புக்கொடி காட்டப்பட்டு ‘கோ பேக் ஜெகன்’ என முழக்கம் எழுப்பப்பட்டது.
குண்டூர் மாவட்டம், தெனாலியில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் அவரது வருகைக்கு தலித் சங்கங்கள், மக்கள் இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தெனாலி மார்க்கெட் வளாகம் கூட்டு சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தலித் சமூகத்தை சேர்ந்த கிரண் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அப்போது முதல்வராக இருந்த ஜெகன், அவரது உடலை காண்பதற்கு கூட வரவில்லை என தலித் சங்கத்தினர் குற்றம் சாட்டினர். ஐதா நகர் கூட்டு சாலையில் தலித் சங்கத்தினர் ஜெகனின் காரை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோ பேக்: ‘ஜெகன் கோ பேக்’ என கோஷமிட்டு, கருப்புக்கொடி காட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்தவர்கள், ரவுடிகளுக்கு ஜெகன் எவ்வாறு ஆதரவு தெரிவிக்கலாம் என தலித் சங்கத்தினர் கேள்வி எழுப்பினர். மேலும் கருப்பு பலூன்களையும் ஜெகன் முன் பறக்க விட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர். இதனால் தெனாலியில் நேற்று காலையில் பரபரப்பு நிலவியது.