புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா வரும் ஜூன் 8-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார். உத்தர பிரதேசம் லக்னோவை சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா (40). இந்திய விமானப்படை விமானியான அவர், இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதற்காக ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி மையத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் அவர் சிறப்பு பயிற்சி பெற்றார்.
இந்த சூழலில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளது. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவும் இடம் பெற்றுள்ளார்.
வரும் 29-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 4 வீரர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது பயண திட்டம் ஜூன் 8-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்வார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.