புதுடெல்லி: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக ஜிஎஸ்டியை எளிமைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது. மோடி அரசு, ஒரு நாடு ஒரு வரி என்பதை ஒரு நாடு 9 வரிகள் என மாற்றியது. அதில், 0%, 5%, 12%, 18%, 28% மற்றும் 0.25%, 1.5%, 3% மற்றும் 6% என்ற சிறப்பு வரி விகிதங்களும் அடங்கும். 2019 மற்றும் 2024 தேர்தல் அறிக்கையில் எளிமையான ஜிஎஸ்டி 2.0-ஐ காங்கிரஸ் கோரியிருந்தது.
மொத்த ஜிஎஸ்டியில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 64% வசூல் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பைகளில் இருந்து வருகிறது. ஆனால், கோடீஸ்வரர்களிடமிருந்து 3% வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
அதேநேரம், அவர்களுக்கு சாதகமாக கார்ப்பரேட் வரி விகிதம் 30%-லிருந்து 22-ஆக குறைக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக தூக்கத்தில் இருந்த மோடி அரசு தற்போது விழித்துக்கொண்டு ஜிஎஸ்டியை மறுசீரமைத்துள்ளது. இது ஒரு நல்ல விஷயம். அதேநேரம், ஜிஎஸ்டி குறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு அந்த இழப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும்” என்றார்.