புதுடெல்லி: வரும் நவராத்திரி முதல் அமலுக்கு வர உள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு, இந்திய பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “2014-க்கு முன்பு, வரி விதிப்பு முறை மிகவும் சிக்கலானதாக இருந்தது. பல நிலைகளில் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி அதை எளிதாக்கியது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தம், மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.
தினசரி பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. சுதந்திரதினத்தன்று டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. நவராத்திரி முதல் நாள் முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து மாற்றங்களும் நடைமுறைக்கு வரும்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் இந்தியாவின் பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றும். தூய பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது ரூ.3.30 லட்சம் கோடியாக உள்ளது. இதில், ரூ.2.02 லட்சம் கோடி நமது நுகர்வு. இந்த நுகர்வில் 10% அதிகரித்தாலும் கூடுதலாக ரூ. 20 லட்சம் கோடி நுகர்வு அதிகரிக்கும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும். நுகர்வு நேர்மறையான முறையில் அதிகரிக்கும். இது பொருளாதாரத்தில் ஒரு நல்ல சுழற்சியை உருவாக்கும்” என தெரிவித்துள்ளார்.