ராஞ்சி: ஜார்க்கண்டில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஷங்கா முதல் கஜூரி வரையிலான 23 கி.மீ. நீளத்துக்கு, ரூ.1,130 கோடி செலவில் புதிதாக 4 வழி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதுபோல, சத்தீஸ்கர், ஜார்க்கண்டை இணைக்கும் என்எச் 39-ல் 32 கி.மீ. நீளத்துக்கு ரூ.1,330 கோடி செலவில் 4 வழி சாலை அமைப்பதற்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் பிஹார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் இடையே சிறந்த இணைப்பை ஏற்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அந்த வகையில், ஜார்க்கண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்படும். இதில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிவடைந்துள்ளன.
இப்போது ரூ.70 ஆயிரம் கோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ரூ.75 ஆயிரம் கோடி திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. ஜார்க்கண்டில் கடந்த 2014-ம் ஆண்டு 2,600 கி.மீ. ஆக இருந்த தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம், இப்போது 4,470 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.