ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக ஸ்ரீநகரை தளமாகக் கொண்டு செயல்படும் ராணுவத்தின் ஒரு பிரிவான சினார் கார்ப்ஸ், வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேசத்திற்கான கடமையில் ஈடுபட்ட துணிச்சல்மிகு வீரர்களான பிரித்பால் சிங், செப் ஹர்மிந்தர் சிங் ஆகியோர் உச்ச தியாகத்தை புரிந்துள்ளனர். அவர்களின் தியாகத்தை ராணுவம் மதிக்கிறது. அவர்களின் தைரியமும் அர்ப்பணிப்பும் என்றென்றும் எங்களுக்கு ஊக்கமளிக்கும். இந்திய ராணுவம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அதோடு, பாதிக்கப்பட்டு துயரத்தில் உள்ள குடும்பங்களுடன் ராணுவம் ஒற்றுமையுடன் நிற்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது,” என்று தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் இரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஒன்பது நாட்களாக பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஎஃப் மற்றும் சிறப்பு நடவடிக்கைக் குழு (எஸ்ஓஜி) ஆகிய படைகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு, குல்காம் மாவட்டத்தின் அகல் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர்.
மேலும், ஜூலை 30 அன்று பூஞ்ச் பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.