புதுடெல்லி: பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நடவடிக்கையை திரும்ப பெறக் கோரியும், இது குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க கோரியும் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயில் படிக்கட்டில் நின்று கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், திமுக எம்.பி ஆ.ராசா மற்றும் இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பலர் கலந்து கொண்டனர். ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள், வாக்காளர்கள் நீக்கத்தை தடுத்து நிறுத்துங்கள் என அவர்கள் கோஷம் எழுப்பினர்.