புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நேற்று பங்கேற்கவில்லை. இருவரும் பங்கேற்காதது குறித்து அவர்களிடம் இருந்தோ அல்லது காங்கிரஸ் கட்சியிடமிருந்தோ அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
என்றாலும் கடந்த ஆண்டு இருக்கை ஏற்பாட்டில் ராகுல் காந்தி அதிருப்தி அடைந்ததால் அவர் இந்த ஆண்டு விழாவில் பங்கேற்க வில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இரு தலைவர்களும் சமூக ஊடகம் மூலம் நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு புகழாரம் செலுத்தி, குடிமக்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். அதேவேளையில் இந்திரா பவனில் நடைபெற்ற விழாவில் ராகுல் பங்கேற்றார்.