புதுடெல்லி: சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இந்தியா வலுவான வர்த்தக உறவுகளை கொண்டிருப்பது அவசியம் என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு தீபாவளிக்கு முன் மற்றொரு முக்கிய சீர்திருத்தம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் ராஜீவ்கவுபா தலைமையிலான குழு ஏற்கெனவே இந்த சீர்திருத்தங்கள் குறித்த முதல் அறிக்கைகளை சமர்பித்துள்ளது.
முழு ஐரோப்பிய ஒன்றியமும் 50 சதவீத வர்த்தகத்தை தங்களுக்குள்ளாகவே செய்து கொள்கிறது. வங்கதேசம் இந்தியாவின் 6-வது பெரிய வர்த்தகபங்குதாரர். நேபாளம் முன்பு முதல் 10 இடங்களுக்குள்ளாக இருந்தது. அண்டை நாடுகளுடன் வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டியது மிக அவசியம். சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நமது வர்த்தகத்தை வலுப்படுத்த வேண்டும். 18 டிரில்லியன் டாலர் கொண்ட சீனப் பொருளாதாரத்தை நாம் அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாது, தவிர்க்க கூடாது.
சீனாவுக்கு முக்கிய சப்ளையராக இந்தியா உள்ளது. சிறந்த நாடுகள் சீனாவுடன் நல்ல அளவில் வர்த்தக உபரியைக் கொண்டுள்ளன. எனவே, நாம் அவற்றுடன் போட்டியிட்டு நல்ல பொருட்களை சீனாவுக்கு விற்பனை செய்ய இயலும். இவ்வாறு சுப்ரமணியம் தெரிவித்தார்.