புதுடெல்லி: சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2வது இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது.
சிறு வணிக நிறுவனங்கள், முறைப்படுத்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்களிடம்(வங்கிகள் உள்ளிட்டவை) இருந்து கடன்களைப் பெறுவது வழக்கம். அவ்வாறு பெறும் கடன்களின் அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி(SIDBI) மற்றும் CRIF High Mark ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை விவரம் வருமாறு: கடந்த 2025, ஜூன் 30 நிலவரப்படி தமிழ்நாட்டின் சிறு வணிகக் கடன் தொகுப்பு சுமார் ரூ. 4.21 லட்சம் கோடி. 2024, ஜூன் 30ல் இது ரூ. 3.64 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஓராண்டில் 15.7% வளர்ச்சி கண்டுள்ளது.
அதிக கடன் சந்தையைக் கொண்டிருப்பதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலம், 2025, ஜூன் 30ல் ரூ. 6 லட்சம் கோடி கடன் சந்தையைக் கொண்டுள்ளது. ரூ. 3.69 லட்சம் கோடி கடன் சந்தையுடன் குஜராத் 3ம் இடத்தையும், ரூ. 3.61 லட்சம் கோடி கடன் சந்தையுடன் உத்தரப் பிரதேசம் 4ம் இடத்தையும், ரூ. 3.18 லட்சம் கோடி கடன் சந்தையுடன் கர்நாடகா 5ம் இடத்தையும் பிடித்துள்ளன.
ரூ. 5 கோடிக்கு மிகாமல் கடன் பெறும் நிறுவனங்கள் சிறு வணிக நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிறு வணிக நிறுவனங்கள் இரு வகைப்படும். ஒன்று, தனி நிறுவனம், மற்றொன்று தனி உரிமையாளர்கள். நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களின் பெயர்களில் கடன்களைப் பெறுகின்றன. சுய தொழில் செய்பவர்கள் உள்ளிட்ட உரிமையாளர்கள், தங்களின் பெயர்களில் கடன் பெறுகிறார்கள்.
இத்தகைய இரு வகை கடன் பெறுவோர் பெறும் கடன்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, சுயதொழில் செய்வோர் கடன் பெறுவது 11% ஆகவும், நிறுவனங்களின் பெயர்களின் கடன் பெறுவது 8.8% ஆகவும் உள்ளது.
நிறுவன கடன் வாங்குவோர் பிரிவைப் பொறுத்தவரை தமிழகம் 7.9% பங்கையும், குஜராத் 9.7% பங்கையும் கொண்டுள்ளன. கர்நாடகா பெறும் கடன் பங்கில் பெங்களூரு 15.6% – த்தையும், தெலங்கானா பெறும் கடன் பங்கில் ஹைதராபாத் 18.2%, – த்தையும் கொண்டுள்ளன. தமிழகத்தில் சென்னையின் பங்கு 10.6% ஆக உள்ளது.