விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகேயுள்ள சிம்மாசலம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நேற்று நிஜரூப தரிசனம் நடந்தது. இதற்கான டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மீது, சுவர் இடிந்து விழுந்ததில் 7 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே சிம்மாசலம் மலை மீது பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மூலவரின் சந்தன காப்பு களையப்பட்டு, நிஜரூப தரிசனம் நடக்கிறது. இதனால் நிஜரூப தரிசனத்தை காண சிம்மாசலம் கோயிலில் நேற்று முன் தினம் இரவு முதலே பக்தர்கள் பல ஊர்களில் இருந்து திரண்டு வந்தனர்.
இந்நிலையில், செவ்வாய் கிழமை இரவு சிம்மாசலத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வாங்க வரிசையில் நின்றுக்கொண்டிருந்த பக்தர்கள் மீது அருகே இருந்த சுவர் இடிந்து விழுந்தது. இதில் மூன்று பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். இதில் ஐடி ஊழியர் தம்பதி உட்பட 4 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மீட்பு படையினர் அனைவரையும் மீட்டு விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் காயமடைந்தவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைவர்கள் இரங்கல்: சிம்மாசலம் விபத்து குறித்து அறிந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இரங்கல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.