புதுடெல்லி: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது: சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் 379 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன.
கடந்தாண்டு இறுதிவரை உள்ள மொத்த வழக்குகளில் 1,506 வழக்குகள் 3 ஆண்டுகளாகவும், 791 வழக்குகள் 3 முதல் 5 ஆண்டுகளாகவும், 2,115 வழக்குகள் 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகளாகவும், 2,660 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் நிலுவையில் உள்ளன.
இவை தவிர குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சிபிஐ தாக்கல் செய்த 13,100 மேல் முறையீட்டு மனுக்களும் பல உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இவற்றில் 666 மனுக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும், 1,227 மனுக்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாகவும், 2,989 மனுக்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், 4,059 மனுக்கள் 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகளாகவும், 1,778 மனுக்கள் 2 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையும், 2,441 மனுக்கள் 2 ஆண்டுகளுக்கு குறைவாகவும் நிலுவையில் உள்ளன.
கடந்த 2024-ம் ஆண்டில் 644 வழக்குகளில் தீர்ப்புகள் பெறப்பட்டன. இவற்றில் 392 வழக்குகளில் தண்டனை கிடைத்தது. 154 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். கடந்தாண்டில் தண்டனை வீதம் 69.14 சதவீதமாக இருந்தது.
கடந்தாண்டு இறுதி வரை ஊழல் அல்லாத வழக்குகள் உட்பட 11,384 வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. கடந்தாண்டு 807 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. கடந்தாண்டில் 1,005 வழக்குகளின் விசாரணைகளை சிபிஐ முடித்தது. கடந்தாண்டு இறுதி வரை சிபிஐ பதிவு செய்த 529 ஊழல் வழக்குகளின் விசாரணைகள் நிலுவையில் உள்ளன. வழக்குப்பதிவு செய்த ஓராண்டுக்குள் சிபிஐ விசாரணையை முடிக்க வேண்டும். ஆனால், சில வழக்குகளில் தாமதங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு சிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.