ராய்ப்பூர்: வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதன்படி சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாநிலங்களில் தீவிரவாதிகள் சரண் அடையவும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி கடந்த 2024-ம் ஆண்டு முதல் இதுவரை சத்தீஸ்கரில் 1,450 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சரண் அடைந்துள்ளனர். 1,400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பில் இணைந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டு உள்ளது. இதன்காரணமாக சரணடைந்த தீவிரவாதிகள், திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக சத்தீஸ்கர் உள்துறை அமைச்சர் விஜய் சர்மா கூறும்போது, “சரணடைந்த, கருத்தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அரசு சார்பில் உதவிகள் வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.