புதுடெல்லி: லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ப்ரன்ட் அமைப்பைச் சேர்ந்த அர்சலான் பெரோஸ் அஹெங்கர் சமூக வலைதளங்களில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பிய குற்றச்சாட்டில் கடந்த 2021-ல் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அஹெங்கர் மீது யுஏபிஏ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, விசாரணை நீதிமன்றம் செப்டம்பர் 2024-ல் அவரை ஜாமீனில் விடுவிக்க மறுத்து விட்டது.
இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அஹெங்கர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் சுப்பிரமணியன் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘‘இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கங்களில் சேர்ப்பதற்கு சமூக ஊடகங்களில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதும் சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) வரம்புக்குள்தான் வருகிறது. எனவே, அஹெங்கரின் வாதம் நிராகரிக்கப்படுகிறது’’ என்றனர்.