குஜராத்தின் அகமதாபாத் மற்றும் சூரத் நகரில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தை சேர்ந்த 550-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களை கண்டுபிடித்து வெளியேற்றும் பணியில் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையாக குஜராத்தில் 550-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அகமதாபாத்தில் நேற்று அதிகாலை 3 மணி முதல் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குஜராத் காவல் துறையின் குற்றப்பிரிவு, சிறப்பு நடவடிக்கை குழு (எஸ்ஓஜி), ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு என பல்வேறு பிரிவுகள் ஒருங்கிணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டன. இதில் 450-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சுமார் 400 பேர் சண்டோலா பகுதியில் பிடிபட்டனர்.
குஜராத் உள்துறை அமைச்சர், மாநில காவல் துறை இயக்குநர் மற்றும் அகமதாபாத் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல் இணை ஆணையர் ஷரத் சிங்கால் கூறினார்.
முன்னதாக சூரத் நகரில் நேற்று முன்தினம் இரவு நடத்திய சோதனையில் வங்கதேசத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து காவல் துணை ஆணையர் (எஸ்ஓஜி) ராஜ்தீப் சிங் நகும் கூறுகையில், “சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான உளவுத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமாக இந்தியா வந்துள்ளனர். போலி ஆவணங்களுடன் இங்கு வசித்து வந்துள்ளனர். விசாரணைக்கு பிறகு இவர்கள் வங்கதேசத்துக்கு நாடு கடத்தப்படுவார்கள்” என்றார்.
சமீபத்திய வாரங்களில் தலைநகர் டெல்லியிலும் போலீஸார் சோதனை நடத்தி, போலி ஆவணங்களுடன் வசித்து வந்த வங்கதேசத்தினர் பலரை கைது செய்தனர். சட்டவிரோத குடியேற்றம் தேசப் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்றும் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சட்ட அமலாக்க அமைப்புகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.